Monday, July 26, 2010

மியாவ்


எனது மகளுக்கு
மியாவ் என்றால்
ரொம்பப் பிரியம்.

மியாவிற்கும் அதுபோலவே.

அவள் செல்லும் இடங்களெல்லாம்
பின்னாலேயே சுற்றித் திரியும்.

அவளின் உலகத்தில்
அது பொம்மையாகவோ
அல்லது மிட்டாயாகவோ
இருந்திருக்கலாம்.

எனது மகளின்
விரல்களுக்கிடையில் அது
அவ்வப்போது மாட்டிக் கொள்வது
மழைநாட்களில் தான்.

மியாவ் அவளுக்கு
மழைபற்றிய ஆயிரம்
கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

எனது மகள்
பள்ளிக்குச் சென்றிருந்த
ஒரு மழைநாளில்
அடுப்பங்கரை சன்னலில்
வந்தமர்ந்த வெள்ளைநிற மியாவ்
இரத்தம் படிந்திருந்த
பற்களைக் காட்டிச்
சிரித்தபடி தாவிச் சென்றது
இராணியின் நாற்காலிக்கடியில்
நின்றிருந்த எலியைப் பிடிக்க

இப்போது மியாவ்
புஸ்ஸி கேட்டாகியிருந்தது.

Friday, July 16, 2010

கனவுகள்

கனவுகள் உருப்பெறத்
தொடங்கியிருந்தன.

மிகப் பெரும் மலையை
நகர்த்திப் போட்ட பின்
மிக ஆசுவாசமாக
நடந்து கொண்டிருந்தோம் நாம்.

உள்ளங்கையில் ஒட்டியிருந்த
வண்ணங்கள் வெளிறிப் போன
பட்டாம் பூச்சிகள் ஒவ்வொன்றாய்
பறக்கத் தொடங்கின.

எஞ்சியிருந்த பட்டாம்பூச்சிகளை
விரல் விட்டு
எண்ணிக்கொண்டிருந்தோம் நாம்.

கடைசியில் ...
எனது குழந்தை
எரிந்து போனது.

Monday, July 12, 2010

தூக்கணாங் குருவி


போரூர்
விருகம்பாக்கம்
வடபழனி
மயிலாப்பூர்
இராயப்பேட்டை
திருவல்லிக்கேனி
எக்மோர் ...
அமைந்தகரை
அன்னாநகர்
கோயம்பேடு ...

தூக்கணாங் குருவியென
கொத்திச் சேர்க்கிறோம்
வாழ்க்கையை.

Sunday, June 27, 2010

கண்ணாடிச் சில்லுகள்


மௌனங்களுக்கூடாக
சிந்திக்கிடந்த வார்த்தைகள்
வெப்பம் தாளாமல்
சூடேறுகின்றன.

மெலிதாக கைவிரல்கள்
நடுங்கியவன்னம்
தொலைபேசியின்
மறுமுனையிலிருந்து
பேசிக் கொண்டிருந்தேன்
நான்.

பயணத்தில் எங்கோ
தொலைக்கப்பட்ட
பையில்
நமது கடைசி
சந்திப்பின்போது
பரிமாறிய அன்பு
நொறுங்கிக் கிடக்கிறது
பிரிக்கப்படாத பிஸ்கட்டென.

சில நிமிட
நல விசாரிப்புகளுக்குப் பிறகு
மீண்டும் இடமாறிக்கொள்கிறோம்
நாம்.

இன்று
எனது கனவில்
மழைத்துளிகள்
விழுந்து நொறுங்கி
பாதையெங்கும்
பரவிக்கிடக்கின்றன
கண்ணாடிச் சில்லுகள்.

Thursday, June 3, 2010

பிறந்தநாள் ஒலிபெருக்கி


இன்று காலையில்
உனது புகழ் பாடத்தொடங்கிய
போஸ்ட்டு மர
ஒலிபெருக்கியிலிருந்து
பீய்ச்சியடிக்கிறது...
பீரங்கிகளால்
தலை சிதறடிக்கப்பட்ட
எங்களது குழந்தைகளின்
இரத்தமும்
மரண ஓலத்திற்குப் பின்னான
அமைதியும்.

Wednesday, June 2, 2010

நானற்ற எனது இருக்கை


நானற்ற
எனது இருக்கையின்
வெளி நிரம்பிக் கிடக்கிறது
எனது சொற்களால்.

எனது காபி நிற பாட்டிலில்
எஞ்சியிருந்த
நீர் வற்றிப்போகிறது
சாலையோரக் குளமென.

நான் நடந்து சென்ற
பாதைகளிலிருந்து
எனது அடிச் சுவடுகள்
சாரை சாரையாக
ஊர்ந்து செல்கின்றன
புற்று நோக்கி.

எனது ரேகை பதிந்த
விசைப் பலகையின்
விசைகள் யாவும்
வழிதவறி ஊர்மாறி
மொழியற்றுப் போகின்றன.

எனது முகத்தை
கண்ணாடியென
பிரதிபலித்த கணினியின்
நினைவழிந்து போகிறது
தொலைதூரத்தில்
தன்னை இழக்கும் பாடலென.

இக்கனத்தில்
நான் நிறைந்து கொண்டிருக்கிறேன்

உனது வெளியில்
சொற்களெனவும்
நீர் எனவும்
மொழி எனவும்
பாடல் எனவும்
நீ எனவும்....

குறிப்பு : 07 - 06 - 2010 உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதை


Wednesday, May 26, 2010

ரசித்தவை - புகைந்தெரிந்து



புகைந்தெரிந்து
எரிசாம்பலானது
இன்னும் மின்னும்
அனல்
கனகனப்பு
காதலிலிருந்து

- அன்பழகனின் தொழுவு என்ற தொகுப்பிலிருந்து